வேடப்பட்டி அருகே வடவள்ளி காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, ராஜஸ்தான் மாநிலத்தில் சேர்ந்த கோபல்குமார் என்பவர் காரில் 100 கிலோ குட்கா பொருட்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். மேலும், தனிப்படை அமைத்து ரோந்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வடவள்ளி காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் வீரகேரளம் - வேடப்பட்டி சாலையில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வீரகேரளம் பேருந்து நிறுத்தம் வழியாக வந்த காரை போலீசார் நிறுத்தி வாகனத்தை ஓட்டி வந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனையிட்டனர். அப்போது, உள்ளே குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கோபால்குமார் (24) என்பதும், இவர் கோவையில் தங்கி மொத்தமாக குட்கா பொருட்களை எடுத்து வந்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
பின்னர், கோபால் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 100 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.