திருப்பூர் எஸ்.வி காலணி சாலை அருகே வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த மூதாட்டியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு, 5 சவரன் நகையை கொள்ளையடித்து சென்ற நிலையில் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர்: திருப்பூர் அடுத்த எஸ்.வி காலனி மெயின் ரோடு, டி.எஸ்.ஆர் லே அவுட் பகுதியை சேர்ந்தவர்கள் முத்துசாமி - சந்திராமணி தம்பதி. இருவரும் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகன் இவர்களது வீட்டருகே கெமிக்கல் கம்பனி நடத்தி கொண்டு, கே.பி.என் காலனியில் குடியிருந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் சந்திராமணி காலை 4.50 மணிக்கு எழுந்து வீட்டின் முன் பக்க கேட்டை திறந்து வைத்துவிட்டு, கணவருக்காக சமையல் செய்து கொண்டிருந்துள்ளார்.
இந்நிலையில் அவர், நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த முத்துசாமி உள்ளே சென்று பார்த்த போது, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மனைவியை கண்டு அதிர்ச்சி அடைந்த முத்துசாமி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் சந்திராமணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, 55 வயது மதிக்கதக்க மர்ம நபர் ஒருவர் வீட்டிற்க்குள் சென்று விட்டு சிறிது நேரத்தில் வெளியேறிய காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து, அடையாளம் தெரியாத அந்த நபர் சந்திராமணியின் கழுத்தை அறுத்து அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை திருடி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆதாரமாகக் கொண்டு போலீசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதிகாலை நேரத்தில் மூதாட்டியை கழுத்தறுத்து 5 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.