மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் எனவும், பன்னீர் செல்வம் முதல்வராக இருக்க வேண்டும் என்பதே அனைத்து அ.தி.மு.க தொண்டர்களின் விருப்பமாக இருக்கின்றது எனவும் கோவை முன்னாள் அ.தி.மு.க மேயர் ராஜ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

கோவை முன்னாள் அ.தி.மு.க மேயர் ராஜ்குமார் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக முதல்வராக இருக்கும் பன்னீர் செல்வத்தை ஆதரிப்பது என முடிவு செய்து இருப்பதாகவும், கோவை மாநகரில் உள்ள கட்சி நிர்வாகிகள் அனைவரும் அவரை ஆதரிக்க போவதாகவும் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் கட்டாயப்படுத்தி கடத்தப்பட்டு இருப்பதாகவும், இது ஜனநாயக விரோத போக்கு எனவும் அவர்களை மீட்க வேண்டும் என தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் செல்போன்கள் அனைத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் தெரிவித்த அவர், விரைவில் கோவையில் உள்ள ஆதரவாளர்கள் பட்டியலுடன் சென்னை சென்று பன்னீர் செல்வத்தை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
அ.தி.மு.க கட்சிக்காரன் என்ற உணர்வுடன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக தெரிவித்த அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிசன் அமைக்கப்பட இருப்பது வரவேற்கத்தக்கது என கூறினார்.
மேலும், கொடநாடு எஸ்டேட்டினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அளிக்க வேண்டும் எனவும், முதல்வராகும் தகுதி பன்னீர்செல்வத்திற்கு மட்டுமே இருக்கின்றது எனவும் கோவை முன்னாள் மேயர் ப.ராஜ்குமார் தெரிவித்தார்.