கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 5 பேரையும் உக்கடம் அன்பு நகருக்கு அழைத்து வந்து 2வது நாளாக விசாரணை.
கோவை: கோவையில் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி உக்கடம் அருகேயுள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் காரில் இருந்த உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபீன் என்பவர் உயிரிழந்தார்.
இதனிடையே போலீசார் நடத்திய விசாரணையில், முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தமிழக காவல்துறை விசாரித்து வந்த இந்த வழக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில் தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள், இந்த வழக்கில் தொடர்புடையதாக மேலும் உமர் பாரூக், பெரோஸ்கான் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட 9 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அதில், பெரோஸ் கான், உமர் பாரூக், முஹம்மது அசாருதீன், அப்சர் கான் மற்றும் பெரோஸ் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், நேற்றைய தினம் அவர்களை கோவை காவலர் பயிற்சி மைதானத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள், அவர்களை உக்கடம் ஜி.எம்.நகர் பகுதிக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று அன்பு நகர், புல்லுக்காடு ஆகிய பகுதிகளில் ஐந்து பேரை நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 5 பேரையும் கடந்த 21ம் தேதியில் இருந்து 29ம் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.