கூடலூர் அருகே மளிகை கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த போலீசார், உரிமையாளர் முருகானந்தம் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரையை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் அதே பகுதியில் மளிகை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், அந்த மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கூடலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், அங்கு சென்ற கூடலூர் டி.எஸ்.பி மகேஷ்குமார் தலைமையிலான போலீசார் முருகானந்தத்தின் கடை மற்றும் குடோனில் சோதனை செய்தனர். அப்போது, மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மளிகை கடை உரிமையாளர் முருகானந்தத்தை கைது செய்த போலீசார் அவரை கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு ரூ.1.25 லட்சம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.