காதலர் மாதமான பிப்ரவரி மாதத்தை கொண்டாடும் விதமாக நேற்று சார்லஸ்-டயானா காதல் காவியத்தை படித்திருப்பீர்கள். அதென்ன வெளிநாட்டு காதல் கதைகள். பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உரக்கச்சொல்லும் வகையிலான காதல் கதைகள் நம் ஊரில் இல்லையா? என்று நீங்கள் கேட்பதை உணர்ந்து, நம் வரலாறில் காதலின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்ள பாட்டி ஒருவரின் காதல் வரலாறை கொஞ்சம் விளக்க சொல்லி அமர்ந்தோம். மனிதனின் பரிணாம வளர்ச்சியில் காதலின் பங்கு மிக முக்கியம் என்பது புலப்பட்டது. தெய்வீக காதல், ஆத்மார்த்தமான காதல் என்று வரையறுக்கப்படும் காதல் கதைகளுக்கான உண்மையான விளக்கங்களும் புரிந்தது.
இதோ அந்த காலத்து காதல் வாழ்க்கை குறித்த பேச்சியம்மாள் (84) பாட்டியின் பேட்டி :-
எனது சொந்த ஊர் பொள்ளாச்சியை அடுத்த நெகமம் என்கிற பகுதி. அப்போது எனக்கு தெரிந்த மிகப்பெரிய டவுன் பொள்ளாச்சி தான். பேருந்து வசதி கூட அதிகம் இல்லாத எங்கள் கிராமத்தில் இருந்து டவுனுக்கு செல்ல வேண்டுமானால் பல மையில் தூரம் நடந்து தான் செல்ல வேண்டும். வழியில் மாட்டுவண்டி வந்தால் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி பொள்ளாச்சியை சென்றடைவோம். பொள்ளாச்சியில் வெகுவான பொருட்கள் கிடைக்கும் , அதோடு அங்கு வாழ்பவர்கள் பேருந்துகளுக்கும் மோட்டார் சைக்கிளுக்கும் பழகிப்போயிருக்க, அங்கு வாழும் மற்றவர்களும் அதை பார்த்து ஆச்சர்யப்படுவதில்லை. என்றாவது ஒரு நாள் டவுனுக்கு செல்லும் என் போன்ற பெண்கள் டவுனின் வனப்பை பார்த்து பிரம்மித்து போய் வீடு திரும்புவோம்.
இது போன்று குக்கிராமங்களில் பிறந்தவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன, இன்று வரையில் நீடிக்கின்றன. அதனால், காதல் என்பது கிராமங்களிடையே வருவதற்கு சற்று யோசித்து கொண்டுதான் இருந்தது. அதுமட்டுமின்றி, வேற்று சாதியோ அல்லது மதத்தையோ சேர்ந்தவரை காதலிப்பது என்பது கொலை குற்றமாகவே கருதப்பட்டது. டவுனை பார்க்க வேண்டும், அங்கு வாழ வேண்டும் என்ற மிதப்பில் நான் இருக்க ஊட்டியில் இருந்து வந்திருந்தார் எனது அத்தை மகன். அவர் தான் எனது கணவர் மயில்சாமி. ஊட்டி தான் அவர் சொந்த ஊர் என்றதுமே எனக்கு ஒரு வியப்பு.! பொள்ளாச்சியே இப்படி இருந்தால் ஊட்டி எப்படி இருக்கும் என்ற எனது நினைப்பே அவர் மீதான ஆர்வத்தை தூண்டியது.
எந்த நேரமும் காட்டு வேலை, வீட்டு வேலை என்று துரு துரு வென சுற்றித்திருந்த என்னை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. ஆனால், அந்த அன்புக்கு மற்றொரு பெயர் காதல் என்பது எங்கள் இருவருக்கும் அப்போது தெரியவில்லை. ‘ஐ லவ் யூ’ என்றால் என்னவென்றே இருவருக்கும் தெரியாது. அப்போது எனக்கு வயது 15 இருக்கும். உறவினர் ஒருவரின் குடும்ப நிகழ்வுக்காக கோயம்புத்தூரில் உக்கடம் பகுதிக்கு சென்றிருந்தேன். அவரும் அங்கு வந்திருந்தார். என்னை விட 7 வயது பெரியவர் அவர். கூட்டம் கூட்டமாக அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அவர் என்னை பார்த்து சிரிப்பது நான் வெட்கப்படுவதுமாக இருந்தோம். இப்போது நினைக்கையிலும் அந்த தருணத்தை என்னால் உணரமுடிகிறது. நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு செல்லும் முன்பு அவர் என்னிடம், ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறையா?’ என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
வீடு திரும்பியும் பரபரப்பாக இருந்த என்னிடம் அம்மா அதட்டலாக பேச உடனே அழுதுவிட்டேன். பிறகு அப்பா வந்து சமாதனப்படுத்த கோயம்பத்தூரில் நடத்தை எல்லாம் சொல்லி முடித்தேன். அப்பாவுக்கு அதிகமான கோவம். ஆனால், அதை காட்ட அவர் ஊட்டிக்கா செல்வார் என்ற நினைப்பில் நிம்மதியாக இருந்தேன். மறு வாரமே, ஊட்டியில் இருந்து எனது மாமாவும் அத்தையும் வீட்டுக்கு வர அன்று எங்கள் வீட்டில் பயங்கர சண்டை நடந்தது. பக்கத்து வீட்டார்கள் வந்து சமரசம் பேச, பிறகு என் மாமாவும், அத்தையும் சம்மந்த பேச்சை தொடங்கினர். பேச்சு வார்த்தை சுமூகமாக முடிய, பெருமூச்சு விட்டேன். அன்றிலிருந்து ஆரம்பமானது எங்கள் காதல் வாழ்க்கை. அது நாள் வரையில், அழுக்கு சட்டையுடன் வீட்டுக்கு வந்த எனது கணவர், இந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர், புது புது துணிகள் உடுத்தி வந்தார். ‘காலர்’ பெரியதாக இருக்கு சட்டைகளை தான் அவர் அணிவார். நான் கேட்டதை வாங்கிகொடுப்பார். இதனால் என் பெற்றோருக்கும் அவரை மிகவும் பிடித்துப்போனது.
இந்த காலத்து காதலர்களைப் போல அன்று நாங்கள் வெளியே எங்கும் செல்லவில்லை. தொலைபேசியும் இல்லை. இரண்டு வருடங்களில் சுமாராக 8 முறை பார்த்திருப்போம். பார்க்கும் போது மட்டும் இருவரின் அன்பை பரிமாறிகொண்டோம். தொடர்ந்து, எனது 17 வயதில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஒரு ஆண்டிற்குள்ளேயே பெரும்பாலான சண்டைகள் போட்டு ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம்.
பிறகு எங்கள் வாழ்கை நித்தம் இனிமையாகவே அமைந்தது. சிறிது காலம் ஊட்டியில் இருந்தோம். குழந்தைகள் பிறந்த பிறகு அனைவரும் கோவைக்கு குடிபெயர்ந்தோம். எங்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள். அனைவரும் திருமணம் முடிந்து மகழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் என் கணவர் உடல் நிலைக்குறைவால் மரணமடைந்தார். இவ்வாறு பேச்சியம்மாள் பாட்டி தனது காதலை கண்ணீரோடு வெளிப்படுத்தி முடித்தார்.
இக்கட்டுரை படித்து முடித்த ஒவ்வொருவரும், பாட்டியின் காதல் குறித்த சுவாரஸ்யமான கருத்துக்களை வெளிப்படுத்தலாம்.