கரும்புக்கடை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவன் சில தினங்களுக்கு முன்பு கீழே விழுந்து வயிற்று பகுதியில் அடிபட்டதை பெற்றோரிடம் சொல்லாமல் இருந்துள்ளார். பின்னர், உடல் நிலை பாதிப்படைந்ததால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.
கோவை: கோவை கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்தவர் சையது அபுதாஹிர் (42). கூலி தொழிலாளி. இவரது மகன் பக்கிங் சம்சுதீன் (12), இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் காரணமாக சிறுவன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, தனக்கு கடுமையான வயிற்று வலி உள்ளதாக சிறுவன், பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையடுத்து, பக்கிங் சம்சுதீனை பெற்றோர் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றுப் பகுதியில் அடிபட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சை பெற வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதையடுத்து, எப்படி அடிப்பட்டது என்று சிறுவனிடம் தந்தை விசாரித்த போது, கடந்த 24 ஆம் தேதி குனியமுத்தூர் பள்ளிவாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்ததாகவும், வீட்டில் சொல்ல பயமாக இருந்ததால் மறைத்ததாக சிறுவன் தெரிவித்துள்ளான்.
பின்னர், கோவை அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பக்கிங் சம்சுதீன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.