கோவை மாவட்டம் சூலூர் அருகே அரசு பேருந்து முறையான நேரத்தில் இயக்கப்படாமல் இருப்பதை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்த பொதுமக்கள், ஓட்டுனர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே அமைந்துள்ளது காடுவெட்டி பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள நல்லகவுண்டன் பாளையம் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த பேருந்தானது, சரியான நேரத்தில் முறையாக இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதன் காரணமாக கிராம பொதுமக்கள், மாணவ - மாணவிகள், குறித்த நேரத்தில் பணிக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும் செல்ல முடியாமல் அவதியுற்று வருகின்றனர்.
இந்த சுழலில், நல்ல கவுண்டன்பாளையம் கிராமத்திற்கு வந்த 6ஆம் நம்பர் அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தை சரியான நேரத்தில் இயக்கப்படாததை கண்டித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.