பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான மயானம் மற்றும் குட்டை நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து மீட்டுத்தர வலியுறுத்தி பொதுமக்கள், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கோடங்கிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சங்கோதிபாளையம் கிராமம். இந்த கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சங்கோதிபாளையம் பகுதியில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையில் மயானம் மற்றும் குட்டை நிலம் அமைந்துள்ளது. இந்நிலையில், அரசு குட்டையை புனரமைத்து மழை காலங்களில் குட்டையில் தண்ணீர் தேங்கும் வண்ணம் சிறு தடுப்பணையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் புதிதாக தனியார் நிறுவனம் (ஹார்வெஸ்ட் பம்ப்) ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே அந்த தனியார் நிறுவனத்தின் வழித்தடத்திற்கு அரசு மயானம் மற்றும் குட்டை நிலத்தை மணல் கொட்டி மூடியதாக கூறப்படுகிறது.
மேலும் குட்டையில் இருந்த மரங்களை அகற்றியும், தடுப்பணையை சேதப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர், பல்லடம் தாசில்தார் உள்ளிட்டோரிடம் மனு அளித்துள்ளனர். அவர்கள் தங்களது மனுவில், அரசுக்கு சொந்தமான 1.5 கோடி மதிப்பிலான நிலத்தை தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து உள்ளது என்றும், அதனை மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், நிலத்தை மீட்டு தராத பட்சத்தில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட போவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.