கோவையில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் கண்காட்சியாக வேளாண்மைக்கு தேவையான இயந்திரவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியில் மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தயாரித்த பல்வேறு இயந்திரங்கள் பொதுமக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் வேளாண் துறையை இயந்திர மயமாக்குவதற்கும், மனித சக்தியை அதிகம் செலவிடாமல் முழுக்க முழுக்க இயந்திரங்களை கொண்டே விவசாயம் செய்ய ஏதுவாக பல இயந்திரங்கள் கண்காட்சிக்கு வைக்கபட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.



இந்த கண்காட்சி குறித்து விவசாயி ராஜேந்திரன் கூறுகையில், 'நான் சேலம் மாவட்டத்தில் இருந்து வருகிறேன். எனக்கு சொந்தமாக 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் தற்போது வாழை பயிரிட்டுள்ளேன், வேளாண் அறிவியல் மையம் சார்பில் எங்களை இந்த கண்காட்சிக்கு அழைத்து வந்தனர். மண் கட்டிகளை பொடியாக்கும் இயந்திரத்தை வாங்குவதற்காக இங்கு வந்துள்ளேன். கட்டியான மண்ணில் விவசாயம் செய்வதை விட, பொடியாக இருக்கும் மண்ணில் விவசாயம் செய்யும் போது மகசூல் அதிகரிக்கும். இக்கண்காட்சியில் அந்த வகையிலான பல இயந்திரங்கள் உள்ளன. மிகவும் உபயோகமாக உள்ளது இக் கண்காட்சி'
இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.