காங்கேயம் அருகே ஆட்டோ மீது அதிவேகமாக சென்ற பைக் மோதிய விபத்தில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், விபத்து குறித்த அதிர்ச்சியடைய வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சௌடாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுரளி. இவரது மகன் அமிர்தவாசன்(19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அமிர்தவாசன் காங்கேயம் - திருப்பூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
நீலக்காட்டுப் புதூர் பிரிவு அருகே சென்றபோது, சாலையில் திரும்பிய ஆட்டோ மீது மோதியதில், பலத்த காயம் அடைந்த அமிர்தவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தின் அருகேயுள்ள கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், அவ்வழியே மெதுவாக வந்த ஆட்டோ திரும்ப முயன்ற போது, மின்னல் வேகத்தில் பைக் மோதியது தெரியவந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.