டாஸ்மாக்கில் விற்பனையாகும் பாட்டிலுக்கு ரூ.2 மாமுல் தர வேண்டும் என தனி நபர்கள் மிரட்டுவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் டாஸ்மாக் சங்க கூட்டுக் குழு சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது.
கோவை: டாஸ்மாக் அனைத்து சங்க கூட்டு குழுவினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அவர்களது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை மாவட்டத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிற்கு மதுபான விற்பனை நடைபெறுகிறது.
இதனிடையே டாஸ்மாக் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத சில நபர்கள் (திலக், விக்கி, சஞ்சய்) பாட்டிலுக்கு இரண்டு ரூபாய் மாமூல் தர வேண்டும் என எங்களை மிரட்டுகின்றனர். எங்களுடைய அதிகாரிகளிடம் இது சம்பந்தமாக நாங்கள் ஏற்கனவே புகார் அளித்துள்ளோம்.
இந்த நிலையில் தற்போது அவர்களுடைய மிரட்டல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எங்களுடைய தனிப்பட்ட டாஸ்மாக்குக்கு செலுத்த வேண்டிய கணக்குகளையும் சில நபர்கள் அவர்களிடம் பரிமாறுகின்றனர். எதற்காக தனி நபரிடம் தங்களுடைய கணக்குகளை பரிமாற வேண்டும் என நாங்கள் கேள்வி எழுப்பியும் வருகிறோம்.
எனவே உடனடியாக மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு தனிநபரின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும். மேலும் இதுபோன்று பணம் கேட்டு, மிரட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல தமிழ்நாடு அரசின் பெயருக்கும் அந்த துறையின் அமைச்சரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்ட சிலர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இதேபோல், கோவை மாநகர காவல் ஆணையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.