கோவை செட்டிபாளையம் அருகே கணவரை இழந்து மாற்றுத்திறனாளி மகனுடன் வீடின்றி தவித்து வந்த பெண்ணின் மனுவை ஏற்று, 24 மணி நேரத்தில் குடிசை மாற்று வாரியத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து ஆணையை நேரில் சென்று வழங்கிய ஆட்சியர் சமீரன்.
கோவை: கோவை மாவட்டம் செட்டிபாளையம் அடுத்த பெரியார் நினைவு சமத்துவபுரத்தை சேர்ந்தவர் கோபால் மனைவி ஷீலா (44). கணவரை இழந்த இவர் தனது 14 வயது மனவளர்ச்சி குறைபாடுடைய மாற்றுத்திறன் கொண்ட மகன் ராமசாமியுடன் வசித்து வந்துள்ளார்.
தங்க இடம் இல்லாமல் சிரமப்பட்டு வந்த இவரை ஆதரவற்ற மணியம்மாள் (63) என்ற மூதாட்டி தனது வீட்டில் தங்க வைத்து பார்த்து வருகிறார். ஷீலாவுக்கும், மூதாட்டி உறவு முறை இல்லை என்றாலும் கூட மனிதநேயத்துடன் தன்னுடன் தங்க வைத்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
மாற்றுதிறன் கொண்ட சிறுவனை அருகில் இருந்து எப்போதும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை என்பதால் ஷீலாவால் வேலைக்கு கூட செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளி நல உதவி தொகையே பெரிய வாழ்வாதாரம். அது தவிர, ஷீலா மற்றும் அவரது மகனுக்கு உறுதுணையாக கோவையில் உள்ள ஹோட்டலில் பாத்திரம் கழுவும் வேலைக்கு ரூ.6500 ஊதியத்துடன் கடந்த அக்டோபர் மாதம் வரை மணியம்மாள் சென்று வந்துள்ளார்.
வயது மூப்பு காரணமாக பணியை விட்டு நின்றுவிட்டு தற்போது 4 ஆடுகள் வாங்கி பராமரித்து வருகிறார். தனது காலத்திற்கு பின்னர், ஷீலாவும், அவரது மகனும் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவிப்பார்கள் என்பதால் அவர்களை வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமிற்கு அழைத்துச் சென்று ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதனை உடனடியாக பரிசீலனை செய்த மாவட்ட ஆட்சியர் சமீரன், மனு அளித்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் மலுமிச்சம்பட்டி திட்ட பகுதி குடியிருப்பில் உடனடியாக வீடு ஒன்றை ஒதுக்கி உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் சமீரன், பயனாளி ஷீலா வசிக்கும் இடத்துக்கு இன்று நேரில் சென்று வழங்கினார். மனிதநேய அடிப்படையில் உறுதுணையாக இருந்த ஷீலா, அவரது மகனுக்கு உதவி செய்த மணியம்மாளை மாவட்ட ஆட்சித் ஜி.எஸ்.சமீரன் பாராட்டினார்.
மேலும், தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டிய ரூ.36,000 மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியில் இருந்து வழங்கினார்.