பொங்கல் தொகுப்பில் தேங்காயை சேர்த்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவை துடியலூரில் பாஜக விவசாய அணி சார்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
கோவை: தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்போடு, தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்து தமிழக அரசை வலியுறுத்தி, "விலையில்லா தேங்காய் வழங்கும் கவனயீர்ப்பு போராட்டம் தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக துடியலூரில் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய ஜி.கே.நாகராஜ், தென்னை விவசாயிகளின் வாழ்வதாரத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் தேங்காயின் முக்கியத்துவத்தை உணர்ந்து தமிழக அரசு மதிய உணவில் தேங்காய் பால் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் பேசிய அவர், ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் எனவும், பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்போடு, தேங்காயும் சேர்த்து வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட தேங்காய் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பாஜக நிர்வாகிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.