கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் தொடர் மர்ம மரணங்கள் நிகழ்வதாகவும், அதற்காக நீதி விசாரணை நடத்தக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்ற சுபஸ்ரீ என்ற பெண் அங்கிருந்து வெளியேறிய நிலையில் செம்மேடு பகுதியில் கிணற்றில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சுபஸ்ரீயின் மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னாள் எம்எல்ஏ ஆறுமுகம் தலைமை வகித்தார்.
சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் எனவும் ஈஷா யோகாவில் தொடர் மர்ம மரணங்கள் நிகழ்வுதாகவும் அதற்கான நீதி விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.