தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தி சூலூரில் திமுகவினர் ஆளுநர் உருவப்படத்தை எரித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பேரவையில் ஆளுநர் உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் கருத்துக்கள் சிலவற்றை அவர் தவிர்த்துவிட்டார் என திமுக குற்றம்சாட்டியது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் பேசியக் கொண்டிருந்தபோது, ஆளுநர் திடீரென அவையிலிருந்து வெளியேறினார்.
தமிழக ஆளுநரின் இந்த நடவடிக்கையை கண்டித்து கோவை மாவட்டம் சூலூர் கலங்கல் சாலை சந்திப்பில் திமுகவினர் நேற்றிரவு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, ஆளுநர் ஆர்.என். ரவி தமிழக அரசுக்கு எதிராகவும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் செயல்படுவதாக கூறி முழக்கங்களை எழுப்பிய திமுகவினர், மத்திய அரசு அவரைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்.
அப்போது, ஆளுநர் ஆர்.என். ரவியின் உருவப்படங்களை சாலையில் நடுவே நின்றவாறு திமுகவினர் தீயிட்டுக் கொளுத்தி தொடர் முழக்கங்களை எழுப்பியதால், அந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.