கோவை பகுதிகளில் நின்றிருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தி வந்த கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவையில் ரேஸ்கோர்ஸ், அரசு ஊழியர்கள் குடியிருப்பு, பங்களாக்கள் உள்ளிட்ட இடங்களில் சந்தன மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக நகரின் பல இடங்களில் சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டி கடத்துவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதுகாப்பு மிகுந்த ரேஸ்கோர்ஸில் உள்ள ஆட்சியர் பங்களாவில் சந்தனமரம் வெட்டிக் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்தல்காரர்களை போலீசார் தீவிர தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் சந்தன மர கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 பேர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், தனிப்படை போலீசார் அங்குச் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்குச் சந்தேகிக்கும் வகையில் தங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பலைப் பிடித்து விசாரித்தனர்.
அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததையடுத்து, ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் சத்தியமங்கலத்தை சேர்ந்த செல்வகுமார் (37), திருப்பூர் நெசவபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார், பீகாரைச் சேர்ந்த மிஸ்பர்(29), ஈரோடு மாவட்டம் தாளவாடியை சேர்ந்த ஹீமாயூன் (70), சத்திமங்கலத்தை சேர்ந்த முகமது அலி ஜின்னா(30) என்பதும், 5 பேரும் சந்தன மர கடத்தலில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

கைதான 5 பேரும் கோவையில் எங்கெல்லாம் சந்தன மரத்தை வெட்டி கடத்தியுள்ளனர்? ரேஸ்கோர்ஸ் ஆட்சியர் பங்களாவில் சந்தன மரம் கடத்தப்பட்டதற்கும், இவர்களுக்கும் தொடர்பு உள்ளதா? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என பல்வேறு கோணங்களில் ஆர்.எஸ். புரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.