பொங்கல் தினத்தன்று எஸ்.பி.ஐ வங்கித் தேர்வு அறிவித்திருப்பதை கண்டித்து நாடாளுமன்றமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோவையில் மார்க்சிய பெரியாரிய அம்பேத்கரிய இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை: பொங்கல் பண்டிகை தினத்தன்று பாரத ஸ்டேட் வங்கி தேர்வை அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் நேற்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சு. வெங்கடேசனுக்கு ஆதரவாக, கோவை பாரத ஸ்டேட் வங்கி முன்பு நேற்றிரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்புகள் கலந்துகொண்டனர். மத்திய அரசுக்கு எதிராகவும், மத்திய நிதி அமைச்சருக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
தமிழக அரசின் கோரிக்கையினை ஏற்று சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து, அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் முடிவு செய்வதாக கூறி கோவை SBI அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.