கோவை மாவட்டத்தில் தடாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டுவந்த 177 செங்கல் சூளைகளுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், விதிகளை மீறி சூளைகளில் ஏதேனும் பணிகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சமீரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் தடாகம் பள்ளத்தாக்குப் பகுதிக்கு உட்பட்ட ஐந்து கிராம ஊராட்சிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 177 செங்கல் சூளைகள், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2021 ஜூன் 13ம் தேதி ஆட்சியர் உத்தரவின்படி 'சீல்' வைக்கப்பட்டன. அதற்கு முன்பே, செங்கல் சூளைகள் விதிமீறல்கள் தொடர்பாக, நாளிதழில் வெளிவந்த தொடர் கட்டுரையின் அடிப்படையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்தது.
அந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவின்படி, ஆட்சியர் தலைமையிலான குழு, செங்கல் சூளைகளால் நடந்த மண் கொள்ளை மற்றும் சூழலியல் இழப்பு குறித்து அறிக்கை சமர்ப்பித்தது. அதில், 373 கோடி ரூபாய் அளவுக்கு மண் கொள்ளை நடந்திருப்பதாகவும், 66 கோடி ரூபாய் அளவுக்கு சூழலியல் இழப்பு நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் இறுதி உத்தரவு வருவதற்கு முன்பே, தமிழக அரசை செங்கல் சூளை உரிமையாளர்கள் அணுகி வந்தனர். செங்கல் விற்பனையாளர்களின் மேல் முறையீட்டை ஏற்று, தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் செயல்முறை ஆணை பிறப்பித்தார். அதில், தவணை முறையில் அபராதம் செலுத்தவும், முதலில் ரூ.2 லட்சம் அபராதம் செலுத்தி விட்டு சூளைகளை இயக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அதன்படி, ரூ.2 லட்சம் அபராதம் செலுத்தி விட்டு, சூளைகளில் இருப்பிலிருந்த பல லட்சம் செங்கல்கள் எடுத்துச் சென்று விற்கப்பட்டன. இது தொடர்பாக, செங்கல் சூளைகளுக்கு எதிராக பல்வேறு மனுதாரர்களும், உயர்நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
அதில், சுரங்கத்துறை கமிஷனரின் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், தடை உத்தரவை மீறி, செங்கல்கள் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுவதாக ஆதாரங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
புகாரின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கடந்த 13ம் தேதி அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தார். கோவை புறநகர் எஸ்.பி., கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி. மற்றும் கோவை வடக்கு தாசில்தார் ஆகியோருக்கு இதுதொடர்பாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், "தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஜன.6ல் வழங்கிய உத்தரவின்படி, ஜன.11ல் இவ்வழக்கின் விசாரணை நடைபெறவுள்ளது. அதுவரை செங்கல் சூளைகளில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும்.
இவ்வழக்கில், உயர்நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்படும் வரை, செங்கல் சூளைகளில் எவ்வித செயல்பாடுகளும் மேற்கொள்ளாத வகையில் கண்காணிக்கவும், மீறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது." என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.