கோவையில் சமீப காலமாக பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மதுக்கரை பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவருக்கும் அவரது மனைவி மல்லிகாவுக்கும் பன்றிக்காய்ச்சல் இருப்பது அறியபட்டு இருவரும் மதுக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், அவர்களது மகன் சந்தான கிருஷ்ணன் (27) மற்றும் மகள் மரகதம் (25) ஆகியோருக்கு கோவை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, இருவரும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, அண்ணன் தங்கை இருவருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பன்றிக்காய்ச்சலுக்கு தாய், தந்தை மரணமடைந்த நேரத்தில், அவர்கள் பிள்ளைகளுக்கும் பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பதையறிந்த மதுக்கரை பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.