பல்லடம் அடுத்த மாதப்பூர் ஊராட்சியில் மயான பூமியை ஆக்கிரமித்து திமுக கட்சி அலுவலகம் அமைக்கப்பட்ட நிலையில், பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பொங்கலூர் ஒன்றியத்திற்குட்பட்ட மாதப்பூர் ஊராட்சி தலைவராக பாஜகவை சேர்ந்த அசோக்குமார் தலைவராக உள்ளார்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வந்த நிலையில் மாதப்பூர் கிராமத்தில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள இடத்தில் இன்று காலை திமுக தோரணம் மற்றும் கட்சிக் கொடியுடன் கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்றதாக தெரிகிறது.
இந்த கட்டிடம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் நூலகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் நிறைந்த பகுதியில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடம் அமைந்துள்ள இடமானது மயான பூமி எனவும் கூறப்படுகிறது.
விடுமுறை நாட்களை பயன்படுத்தி மயான பூமியை ஆக்கிரமித்து திமுக கட்சி அலுவலகம் திறக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து பல்லடம் தாசில்தாரிடம் கேட்டபோது, முறையாக ஆக்கிரமிப்பை அகற்ற நோட்டீஸ் அளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பொங்கலூர் ஒன்றிய சேர்மன் குமாரிடம் கேட்டபோது, திறக்கப்பட்டது ஏற்கனவே அங்கிருந்த டீக்கடை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.