காய்கறிகளுக்காக நமது முன்னோர்கள் பெரிய அளவில் செலவு செய்தது இல்லை. ஆனால், இன்று கணிசமான தொகையில் குறைந்த அளவு காயகறிகளை வாங்கும் நிலைதான் உள்ளது.
காரணம், காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போவதுதான். அப்படி வாங்கும் காய்கறிகள் ரசாயன உரம் தெளித்து விளைய வைக்கப்பட்டதாகவும் இருப்பதால் அவை சத்துக்குறைபாடுள்ள, மேலும் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு ஆறாம் திணை ஆர்கானிக் சந்தை நந்தகோபால், சுவாசம்- செல்வகுமார், இயற்கை அன்னை- நவீன் ஆகியோர் இணைந்து பசுமை தேசம் சார்பில் பெரியநாயக்கன்பாளயத்தில் பாரம்பரிய காய்கறித் தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைப்பதற்கான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் தோட்டம் அமைப்பதற்கான சூழலை அறிதல், விதைகளை தேர்வு செய்யவது மற்றும் பாதுகாப்பதற்கான வழிமுறைகள், தொழு மண், மண் புழு உரம், வீட்டுக் கழிவுகள் கொண்டு இயற்கை உரம் தயாரிப்பு, நீர் மற்றும் ஆற்றல்களின் சிக்கன பயன்பாடு, பூச்சிகளை அறிதல் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரிப்பு, தோட்ட பராமரிப்பு மற்றும் பாரம்பரிய நாட்டு மாடு வளர்ப்பு, அதில் வரும் பால் இல்லாமல் மற்ற மாட்டின் சானம், கோமியம் மதிப்பு கூட்டி விற்பது பற்றிய பயிற்சியும் அளிக்கப்பட்டது.
இதில், மாடு வளர்ப்பு பற்றிய பயிற்சிக்கு தூத்துக்குடியில் இருந்து 6 விவசாயிகள் உட்பட மொத்தம் 67 நபர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். நிறைவாக, பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தேக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.