மத்திய பட்ஜெட்டில் மூலப்பொருட்களுக்கு நியாயவிலைக்கடை, வீட்டுக் கடனுக்குச் சலுகை உள்ளிட்டவை இடம் பெறும் என தொழில் துறையினர் எதிர்பார்ப்பு.
கோவை: மத்திய பட்ஜெட்டில் தொழில் துறையினருக்குச் சாதகமான திட்டங்கள் இடம் பெறும் என தொழில்துறையினர் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
மத்திய பட்ஜெட் வரும் 31ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அதுகுறித்த எதிர்பார்ப்புகளைக் கோவை தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின்(கொடிசியா) தலைவர் திருஞானம் கூறுகையில்,

என்பிஏ என்று சொல்லக்கூடிய முடக்கப்பட்ட செயல்படாத சொத்துக்கள் குறித்த தற்போதைய வரையறைகள் நீட்டிக்கப்பட வேண்டும். நடப்பு மூலதனத்தை எளிதில் பெறும் வகையில் பில் கவுண்டிங் மற்றும் பேக்டரிங் சேவை குறித்து வங்கிகள் கொண்டுள்ள வரையறைகள் மாற்ற வேண்டும்.
சிஜிடிஎம்எஸ்இ என்ற நிதியுதவி திட்டத்தின்கீழ் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் கடன்பெறாத தகுதி உள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடனுதவி வழங்க வேண்டும். கடனுதவி பெறுவதற்கான தரவரிசை(கிரெடிட் ரேட்டிங்) என்பது அனைத்து தொழில்களுக்கும் ஒரே மாதிரியாக உள்ளது. இதை மாற்றி எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ஏற்ப தனியாக உருவாக்க வேண்டும்.
இந்தியத் தொழில்முனைவோர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் ரகுநாதன் கூறுகையில்,

குறு நிறுவனங்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும். கரோனா நோய்த்தொற்று பரவலால் ஏற்பட்ட தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோர் பயன்பெற எளிதான மூடுதல் திட்டத்தை அறிவிக்க வேண்டும். இதனால் புதிய வணிக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்க உதவும்.
தொழிற்பேட்டை வளாகங்களில் மூலப்பொருட்களுக்கென பிரத்யேக நியாய விலைக்கடைகளை தொடங்க வேண்டும். பட்டதாரிகள் குறு, சிறு தொழில் நிறுவனங்களில் பயிற்சி பெற மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
குறு, சிறு மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்கும் விதிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும். இப்பிரிவைச் சேர்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் தொகையில் 30 சதவீதம் வருமானவரி விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்றார்.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில்முனைவோர் சங்கம்(காட்மா) தலைவர் சிவக்குமார் கூறுகையில்,

மோட்டார், பம்ப், வெட்கிரைண்டர், ஜவுளித்தொழில் உதிரிப்பாகங்கள் உள்ளிட்டவை கோவை மாவட்டத்தின் பிரதான உற்பத்தி பொருட்களாகும். பம்ப மற்றும் மோட்டார் பணி ஆணைகள் பெரும்பாலும் வடமாநிலங்களுக்குச் சென்றுவிட்டதால் குறுந்தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு சார்பில் பொதுத்துறை நிறுவனம் கோவையில் அமைக்க வேண்டும். அனைத்து பொதுத்துறை நிறுவனங்களிலும் குறுந்தொழில் முனைவோர் பயன்பெற வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறுந்தொழில் முனைவோருக்கு 5சதவீத வட்டியில் கடனுதவி வழங்க வேண்டும்.
முத்ரா கடனுதவிக்கென பிரத்யேக வங்கி கிளைகள் தொடங்க வேண்டும். எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கென தனி நிதிநிலை அறிக்கை அறிமுகம் செய்ய வேண்டும். என்றார்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் ஊரக தொழில்முனைவோர் சங்கத்தின்(டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறுகையில்,

2020ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை விதிக்கப்பட்டுள்ள அபராத வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
பணி ஆணைகளை மட்டும் செய்யும் குறுந்தொழில் முனைவோருக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்க வேண்டும். மூலப்பொருட்கள் விலை உயர்வைத் தடுக்க பிரத்யேக கமிட்டி அமைக்க வேண்டும். குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்குத் தனியாகக் கடனுதவி திட்டத்தை அறிவித்து 5 சதவீத வட்டியில் கடனுதவி வழங்க வேண்டும்.
பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து 25 சதவீத பணி ஆணைகள் குறு, சிறு தொழில்முனைவோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள தொழில்துறை மாவட்டங்களைக் கண்டறிந்து குறுந்தொழிற்பேட்டைகளை பிரத்யேகமாக அமைக்க வேண்டும். என்றார்.

வார்பட தேசிய தொழில் அமைப்பு இன்ஸ்டியூட் ஆப் இந்தியன் பவுண்டரிமென்(ஐஐஎப்) தென்மண்டல தலைவர் முத்துக்குமார், கோவை கிளை முன்னாள் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் கூறுகையில், வார்பட தொழிலுக்குத் தேவை அதிகம் உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு புதிதாகத் தொழிற்சாலை அமைக்கவும், இருக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யவும் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு விரைவில் அனுமதி வழங்க வேண்டும். சாலை, ரயில், விமான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
உற்பத்தித்துறைக்கு உதவும் வார்பட தொழிலுக்கு உதவும் வகையில் சிறப்பு கவுன்சில் அமைக்கலாம். காற்றாலை, சூரியஒளி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
வார்பட தொழிற்சாலை கழிவுகளை அப்புறப்படுத்தத் தொழிற்பேட்டை வளாகங்களில் பிரத்யேக கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய வார்பட தொழிலில் முதலீடு செய்யப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்படுத்த வேண்டும் என்றார்.
இந்திய ஜவுளித்தொழில் முனைவோர் கூட்டமைப்பின்(ஐடிஎப்) கன்வீனர், பிரபு தாமோதரன் கூறுகையில்,

சாயமூட்டப்பட்ட துணி வகைகளைத் தயாரிக்க முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். இதனால் இந்தியாவில் புதிய முதலீடுகள் அதிகரிக்கவும் கட்டமைப்பு வசதிகளும் மேம்படும். மொத்தத்தில் ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சி பெறும். பொருளாதாரத்தில் நுகர்வை அதிகரிக்கச் செய்யும் வகையில் சலுகைகளை அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். என்றார்.

கட்டுமான தொழில் நிறுவனமான கிரெடாய் தமிழ்நாடு செயலாளர் அபிஷேக் கூறுகையில், நாடு முழுவதும் ஒரே விகிதத்தில் வரி வசூலிக்க வேண்டும். வீடு கட்டும் மக்களுக்கு உதவும் வகையில் வரிச் சலுகைகள் அறிவிக்க வேண்டும். வங்கி பரிவர்த்தனை நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து தொழில் செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எளிமையாக்க வேண்டும். வீட்டு கடனுக்கான வட்டி அதிகம் உள்ளதால் சிறப்புத் திட்டங்களின்கீழ் சலுகைகளை வழங்கி புதிய வீடு கட்ட நினைக்கும் மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார்.