திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் பழுதாகி அடிக்கடி பாதியில் வழியிலேயே நிற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு இடங்களில் போதிய பராமரிப்பு இல்லாததால் அரசு பஸ்கள் ஆங்காங்கே பழுதாகி நிற்கும் சம்பவம் அரங்கேறி வருகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் அனைத்து வீடுகளிலும் இருசக்கர வாகனம் உள்ளது. ஆனால், அவற்றுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய ஒருநாள் வருமானத்தில் மூன்றில் ஒரு பகுதியை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அந்த அளவுக்கு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்ந்துவிட்டது. எனவே, பொது போக்குவரத்தை நம்பி ஏழை, நடுத்தர குடும்ப மக்கள் அதிக அளவில் இருந்துவருகின்றனர்.
குறிப்பாக, தமிழ்நாடு அரசின் டவுன் பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் என்பது அரசுப்பேருந்துக்கான மவுசை அதிகப்படுத்தியுள்ளது. அதேபோல், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் செல்லவும் அரசுப் பேருந்துகளே பெருமளவில் உதவியாக இருந்துவருகிறது.
இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் போதிய பராமரிப்பு செய்யப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. போக்குவரத்துறை அதிகாரிகளின் இந்த அலட்சியம் காரணமாக, கிராமப் பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், ஆங்காங்கே பழுதாகி நின்று விடுகிறது.
அந்த வகையில், இன்று அமராவதியை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி போடிபட்டி அருகே நின்றுவிட்டது.இதனால், பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர். பின்னர் நீண்ட நேரத்துக்கு பின்பு மாற்று பேருந்துகள் மூலம் அவர்கள் புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:
கிராமங்களில் வசித்து வருகின்ற பல தரப்பட்ட மக்கள், போக்குவரத்துக்காக பெரிதும் நம்பியிருப்பது அரசு பேருந்துகளைத்தான். ஆனால் அவற்றை முறையாக பராமரிப்பதற்கு உடுமலை கிளை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. இதனால் பேருந்துகள் பழுதாகி ஆங்காங்கே நின்று விடுவது வாடிக்கையாக உள்ளது.
பஸ்களின் உள்புறத்தில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுவதில்லை. இதனால், பேருந்திற்குள் படியும் மண் மற்றும் தூசுகள் பொதுமக்களுக்கு உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே, உடுமலை கிளையில் இருந்து சுற்றுப்புற கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை முறையாக பராமரித்து பயணிகளுக்கு தங்கு தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.