கோவை தாளியூர் பகுதியில் விவசாயிகளின் தோட்டத்திற்குள் நேற்றிரவு புகுந்த காட்டுயானை, அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைமரங்களை பிடுங்கி எரிந்து சேதப்படுத்திச் சென்ற சம்பவம் விவசாயிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: கோவை ஆனைகட்டி மாங்கரை மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள், அவ்வப்போது மலை அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், தற்போது தடாகம் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக ஒற்றை மற்றும் கூட்டமாக வரும் யானைகள் சுற்றுப் பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
கோவை பன்னிமடையை அடுத்த தாளியூர் பகுதியில் வேலுசாமி, ரங்கராஜ் என்பவர்களது தோட்டத்திற்குள் நேற்று இரவு ஒன்றை காட்டு யானை புகுந்தது.

அப்போது, அங்கிருந்த வாழைமரங்களை பிடுங்கி எரிந்தும், பயிர்களை தின்றும் சேதப்படுத்தியும் சென்றுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள், யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டுமென வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.