கோவை உஉசி மைதானத்தில் 74வது குடியரசு தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும், சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகளுக்கு பதக்கங்கள், நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
கோவை: கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தேசிய கொடியை ஏற்றினார். அதனை தொடர்ந்து நடந்த காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களை ஆட்சியர் சமீரன் வழங்கினார். அதன்படி முதலமைச்சர் காவலர் பதக்கமானது மாநகர காவல் துறையினர் 69 பேருக்கும், மாவட்ட காவல் துறையினர் 43 பேருக்கும் வழங்கப்பட்டன.
மேலும், சிறப்பாக பணிபுரிந்த காவல் துறையினர்களுக்கான நற்சான்றிதழ், மாநகர காவலர்கள் 61 பேருக்கும், மாவட்ட காவலர்கள் 66 பேருக்கும் வழங்கப்பட்டன.
சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்களுக்கான நற்சான்றிதழ் 136 பேருக்கும் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து பள்ளி கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில், கோயம்புத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மேற்கு மண்டல காவல்துறை ஐஜி சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், குடியரசு தினத்தினை முன்னிட்டு மாவட்டத்திலுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் திருவுருவ சிலைகளுக்கு அந்தந்த வட்டாட்சியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
குடியரசு தின நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக, கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த தேசபற்றாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் வ உ சி மைதானம் வந்திருந்தனர்.