கோவை சாஸ்திரி சாலையில் சென்றுகொண்டிருந்த இளைஞரிடம், இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் செல்போனை பறித்து தப்பமுயன்றபோது, பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கோவை: கோவை ப்ரூக்ஃபீல்டில் வேலை செய்து வருபவர் விக்னேஸ்வரன் . இவர் வேலைக்கு செல்வதற்காக ராம் நகர் வழியே சாஸ்திரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள், விக்னேஸ்வரனின் செல்போனை பறித்து தப்பி ஓட முயன்றுள்ளனர்.
அப்போது, அவர்களை துரத்தி பிடிக்க விக்னேஸ்வரன் முயன்றார். அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன் இருசக்கர வாகனத்தை மடக்கிய விக்னேஸ்வரன், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து காட்டூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பிடிபட்ட நபர்களிடம் கார்ட்டூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில், வழிப்பறியில் ஈடுபட்ட முதல் குற்றவாளி வசந்தகுமார் வர்ஷாவில் பணியாற்றக்கூடிய நபர் என்றும், இவர் மீது முன்பே காவல் நிலையங்களில் சில வழக்குகள் நடந்து வருவதும் தெரியவந்தது.
இவருக்கு உதவியாக இருந்த துரைசாமி அண்ணா மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருவது உறுதிசெய்யப்பட்டது. செல்போன் திருட்டில் பிடிப்பட்ட இருவரும் 19வயதான இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இருவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.