அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றிருப்பது ஊழல் ஒழிப்பின் முதல்படி எனவும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிலையான ஆட்சி அமையும் வகையில் முடிவு எடுக்க வேண்டுமெனவும் பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை செளந்திரராசன், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா உள்ளிட்டோர் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று இருப்பது ஊழல் ஒழிப்பின் முதல்படி என தெரிவித்தார்.
மேலும் இந்த தீர்ப்பின் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டு உள்ளதாகவும், ஊழல் ஒழிக்கப்பட்டு தூய்மையான அரசியலை நோக்கி தமிழகம் செல்ல வேண்டுமென்பதே எங்களது கருத்து எனவும் அவர் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆரம்ப ஆட்சி காலத்தில் ஊழல் கறைபடியாமல் தான் ஆட்சி செய்ததாகவும், ஆனால் சசிகலாவின் நட்புக்கு பின்னரே அவரது ஆட்சி மீது ஊழல் கறை படிந்ததாகவும் கூறிய அவர், யாருக்கு தண்டனை கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு தண்டனை கிடைத்துள்ளது என தெரிவித்தார்.
அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிலையான ஆட்சி அமையும் வகையில் முடிவு எடுக்க வேண்டுமெனவும், சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதிகளில் அடக்கி அடைத்து வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். ஆட்சியமைப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் கால அவகாசம் எடுத்து கொண்டது சரியான நடவடிக்கை தான் என்பதை நீதிமன்ற தீர்ப்பு தெளிவுப்படுத்தி உள்ளதாகவும், தமிழக ஆட்சியில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் நிழலோ, சாயலோ வந்தால் மோசமாக தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஊழல் ஒரு பிரச்சனையே இல்லை என்பது போலவும், பா.ஜ.க புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டிய திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோரை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டுமென கூறிய தமிழிசை செளந்திரராசன், தமிழகத்தில் காலுன்ற ஆரம்பித்து விட்ட பா.ஜ.க நேர்வழியில் அரசியலை கைப்பற்றும் என தெரிவித்தார். தமிழகத்தில் நிலையற்ற தன்மை நிலவி வரும் நிலையில் நிலையான ஆட்சியமைய மறுதேர்தல் நடத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருந்தாலும், அதில் அவசரமாக முடிவெடுக்காமல் ஆழ சிந்தித்து முடிவு எடுக்க வேண்டுமென தமிழிசை செளந்திரராசன் தெரிவித்தார்.