பதிவுத் திருமணத்தின் போதே காதலர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கிடக்கோரி ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சமத்துவகழக இளைஞர் அணியினர் 68 பேர் கைது
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்றைக்கு கொண்டாடப்படும் சூழ்நிலையில் சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்து சாதியற்ற சமத்துவ சமூகம் இந்தியாவில் உருவாக்கிட காதல் திருமணத்தை பாதுகாக்க சட்டம் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி சமத்துவ கழக இளைஞர் அணியின் சார்பில் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் பதிவுத் திருமணத்தின் போதே காதலர்களுக்கு துப்பாக்கி உரிமம் வழங்கிடவும், தமிழகத்தில் நடைபெற்ற ஆணவ படுகொலைகளை தடுத்திடக்கோரியும், சாதி மறுப்பு காதல் திருமணம் செய்தவர்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவும், அவர்களது குழந்தைகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிடக்கோரியும் வலியுறுத்தி ரயில்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 7 குழந்தைகள் உட்பட 68 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக காதலர் தின விழா கொண்டாடப்பட்டது. காதல் திருமணம் புரிந்து கொண்ட புது ஜோடிகள் மற்றும் ஏற்கனவே திருமணம் செய்தவர்கள் கேக் வெட்டி குடும்பத்தோடு கொண்டாடினார்கள். காதல் திருமணங்கள் தான் சாதி, மதத்தை அழித்து சமத்துவ சமூகத்தை உருவாக்கும் என்றனர்.