தென்னை விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வட மாநில தொழிலாளர்கள் வருகையைக் கட்டுப்படுத்தகோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தென்னை தொழிலாளர்கள் போராட்டம்.
கோவை: தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், தென்னை தொழிலாளர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும் தென்னை தொழிலாளர்கள் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தென்னை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதை நம்பி தேங்காய் உரிக்கும் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள் உள்ளிட்ட தென்னை சார்ந்த தொழில்களை நம்பி லட்சக்கணக்கான கிராமப்புற ஏழை எளிய தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் பீகார், ஒரிசா உத்தரப்பிரதேசம், போன்ற வட மாநிலத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தமிழகத்தில் முகாமிட்டு விவசாய பணிகளை மேற்கொண்டு வருவதால், இத்தொழிலை நம்பியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இன்று மக்கள் விடுதலை முன்னணி தென்னை தொழிலாளர்கள் சங்கத்தினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வட மாநில தொழிலாளர்கள் வருகையைக் கண்டித்தும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது அவர்கள் கூறியதாவது,
தென்னை விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தென்னை சார்ந்த தொழில்களை நம்பி வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர். வட மாநில தொழிலாளர்களின் வருகையால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கொத்தடிமைகளாக பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய மாநில அரசுகள் தமிழகத்தில் உள்ள வட மாநில தொழிலாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்த வேண்டும். தென்னை தொழிலாளர்களுக்குத் தனி நல வாரியம் அமைக்க வேண்டும். கூலி நிர்ணயம் செய்யத் தனிக் குழு அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்காவிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.