கோவையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பழனிக்கு பாத யாத்திரை சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டத்தில் இருந்து பெண்கள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் பழனி முருகன் கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றுள்ளனர். இந்நிலையில், அவர்கள், உடுமலையிலிருந்து பழனியை நோக்கி அதிகாலை 3 மணி அளவில் நடந்து சென்றுள்ளனர்.
அப்போது, மடத்துக்குளம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நரசிங்கபுரம் மேடு பகுதியில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாத யாத்திரை சென்றவர்கள் மீது மோதி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் நிர்மலா (52) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், செல்வராணி (40)என்பவர் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த மடத்துக்குளம் போலீசார், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.