தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் பிரித்து வைத்துவிட்டு நாங்கள் சேர்த்து வைப்பதாக நாடகமாடி வருகிறார் என பார்வர்டு பிளாக் தேசிய துணைத்தலைவர் கதிரவன் குற்றச்சாட்டு.
திருப்பூர்: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி பிரச்சாரம் செய்யும் என அக்கட்சியின் தேசிய துணைத் தலைவர் கதிரவன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மன்னரைப் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் 8ஆவது திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேசிய துணைத் தலைவர் கதிரவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கதிரவன் கூறியுள்ளதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி வருகின்ற 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். நிச்சயம் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுக கூட்டணி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்.
தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகிய இருவரையும் பிரித்து வைத்துவிட்டு நாங்கள் சேர்த்து வைப்பதாக நாடகமாடி வருகிறார். தமிழக பாஜகவால் தமிழகத்தில் ஒருபோதும் ஆட்சியைப் பிடிக்க முடியாது.
வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இடதுசாரி கட்சிகள் மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தால் நிச்சயம் வெற்றி பெறும். அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இம்முயற்சியை மேற்கொள்ளும்.
இவ்வாறு, கதிரவன் தெரிவித்தார்.