ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுத் தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த இடைத்தேர்தலில் முதல் நாளே பலர் வித்தியாசமான முறையில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
கோவை: தேர்தல், இடைத்தேர்தல் என்றால் அனல் பறக்கும் பிரச்சாரம், அரசியல் தலைவர்களிள் காரசார விவாதங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்கும். அப்படி அனல் பறக்கும் தேர்தல் களத்தில் அவ்வப்போது சில ஆச்சர்யங்களும் சுவாரஸ்யங்களும் அரங்கேற தவறுவதில்லை. அந்த வகையில், பிப்ரவரி 27ல் நடைபெறவுள்ள ஈரோடு இடைத்தேர்தலும் விதிவிலக்கல்ல.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று ஆரம்பமானது. முதல் நாளே சூடுபிடித்த வேட்புமனுத்தாக்கலில், பல்வேறு சுவாரஷ்யமான நிகழ்வுகளும் அரங்கேறின. குறிப்பாக, சுயேட்சைகள் நூதன முறையில் செய்த மனு தாக்கல்களால் தேர்தல்களமே அமர்க்களமானது.
233வது முறையாக வேட்புமனுத் தாக்கல் - அசத்திய தேர்தல் மன்னன் பத்மராஜன்:
வேட்புமனுத்தாக்கலின் முதல் நாளான்று தேர்தல் மன்னன் பத்மராஜன் (வயது65) வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் வேட்பு மனுவை பெற்றுக் கொண்டார். சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜனுக்கு இது 233 வது தேர்தலாகும். இவர் பஞ்சர் கடை வைத்துள்ளார். கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் எனும் நோக்கத்தில் தேர்தல்களில் போட்டியிட்டு வருவதாக பத்மராஜன் தெரிவித்தார்.
காந்தி வேடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்
காந்தியவாதியான ரமேஷ் (வயது42) என்பவர் மகாத்மா காந்தி வேடமிட்டு வேட்பு மனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலகம் வந்தார். தேர்தல் டெபாசிட் தொகை செலுத்த தராசுடன் ரூ. 10 ஆயிரத்தை சில்லறை காசுகளாக எடுத்து வந்திருந்தார். இது அவருக்கு 10வது தேர்தல்.
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் இவர் போட்டியிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த இவர், யோகா பயிற்சியாளர். காந்தியின் கொள்கையை பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்லும் வகையில் தேர்தலில் களம் காண்பதாக காந்தியவாதி ரமேஷ் கூறினார்.
டம்மி ரூபாய் நோட்டுடன் வேட்பு மனு தாக்கல்:
மதுரை செல்லூரை சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கரபாண்டியன் (வயது38). நீர்வளப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நல இயக்கம் எனும் அமைப்பின் நிறுவனர் இவர். டைல்ஸ் கான்ட்ராக்ட தொழில் செய்து வரும் இவர், கையில் டம்மி ரூபாய் நோட்டுகளுடனும், தூண்டிலுடனும் வித்தியாசமான தோற்றத்தில் வந்த மனுத் தாக்கல் செய்தார். இந்த இடைத்தேர்தல் இவர் போட்டியிடும் 3வது தேர்தலாகும்.
செருப்பு மாலை அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்த நூர்முகமது:
கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் நூர்முகமது (வயது63). செருப்பு மாலை அணிந்தபடி இவர் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்திருந்தார். இது இவருக்கு 41வது தேர்தல் ஆகும். மக்களுக்கு செருப்பாய் உழைப்பேன் என்பதை உணர்த்தும் வகையில் செருப்பு மாலை அணிந்து வந்ததாக கூறிய நூர்முகமது, பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.
பத்து ரூபாய் நாணயங்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்த ராஜேந்திரன்
திருச்சி உறையூரை சேர்ந்த ராஜேந்திரன் (வயது61). அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் டெபாசிட் தொகைக்கான தொகை ரூ. 10 ஆயிரத்தை 10 ரூபாய் காசுகளாக எடுத்து வந்திருந்தார். ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என அறிவித்துள்ளது. ஆனால், வங்கிகள் முதற்கொண்டு அந்த நாணயங்களை யாரும் வாங்குவதில்லை. அரசு அறிவிப்பும் நடைமுறையும் வேறு வேறாக உள்ளது. அதை சீர்படுத்த வேண்டும்.
மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியாக தனி பாடத் திட்டம் தொடங்க வேண்டும். தொழிற் கல்விபோல தேர்தலில் போட்டியிடுவதற்கும் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனும் நிலையை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே தான் தேர்தலில் போட்டியிடுவதாக ராஜேந்திரன் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்ட ஆர்.கே. நகர், ஸ்ரீ ரங்கம் தொகுதிகளிலும் சுயேட்சையாக போட்டியிட்டதாகவும், இது தனக்கு 3வது தேர்தல் என்றும் அவர் கூறினார்.
மனைவி மகளுடன் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்:
மதுரை ஆண்டிப்பட்டியை சேர்ந்த மாரியப்பன் (வயது53) தனது மனைவி இளையராணி (வயது45), பி.ஏ. பி.எட். படித்துள்ள தனது மகள் சத்யா (வயது24) என குடும்பத்துடன் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்திருந்தார். தான் அகில இந்திய தேசிய காங்கிரஸ் மாநிலப் பொதுச் செயலாளர் என்றும் கை சின்னத்தில் போட்டியிடப் போவதாகவும் கூறிய, இவர் மக்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என விழிப்புணர்வுவிழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதாகக் கூறினார்.
பின்னோக்கி நடந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த மனிதன், போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இவர் உலக அமைதியை வலியுறுத்தி கடந்த 1991 ஜூன் 14ம் தேதி முதல் பின்னோக்கி நடந்து வருகிறார். இதுவரை 32 ஆண்டுகள் பல லட்சம் கிலோ மீட்டர்கள் பின்னோக்கி நடந்திருக்கின்றார்.
ஜனாதிபதி தேர்தலில் 7 முறையும் எம்.பி., எம்.எல்.ஏ. கவுன்சிலர் என இதுவரை 32 முறையும் என மொத்தம் 39 முறை தேர்தலில் போட்டியிட்டுள்ளார். இவருக்கு இது 40வது தேர்தல். எப்போது ஜனாதிபதி ஆகிறேனோ அப்போது முதல் முன்னோக்கி நடப்பேன் என கூறினார்.
இவ்வாறு அனல் பறக்கும் தேர்தல் களத்தில் ஆச்சர்யங்கள் அரங்கேறி சட்டமன்ற இடைத்தேர்தல் முதல் நாளே அமர்க்களமானது.