நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் பழங்குடியின பெண்ணை அடித்துக் கொன்ற புலியை 15 நவீன தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய பகுதியில் உள்ள தெப்பக்காட்டில் நேற்று முன்தினம் இரவு 50 வயது மதிக்கத்தக்க மாரி என்ற பழங்குடியின பெண்ணை புலி ஒன்று அடித்து கொன்றது. புதருக்குள் பெண்ணின் உடலை இழுத்து சென்ற புலி, அவரது கை மற்றும் கால்களை சாப்பிட்டுவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.
இதனையடுத்து, மாரியின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டு, உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் என தெப்பக்காடு பகுதியைச் சார்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் புலியை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததுடன் உயிரிழந்த மாறியின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என அறிவித்தனர். இதனை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 15 இடங்களில் நவீன கேமராக்களை வனத்துறையினர் பொருத்தி உள்ளனர்.
அதில், பதிவாகும் புலியின் புகைப்படங்களை வைத்து எந்த புலி, ஆட்கொல்லி புலியாக மாறி உள்ளது என்பதை உறுதி செய்த பின்னர் அதை பிடிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.