கோவையில் சமீபகாலமாக பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது. இது வரை கோவையில் பலர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருந்ததும் அதில் இருவர் மரணமடைந்த சம்பவமும் கோவை மாவட்ட மக்களை பெரும் பீதியடைய செய்துள்ளது.
இந்த நிலையில், பன்றிக்காச்சல் தொடர்பான அறிகுறிகள் தெரிந்தால் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் எட்வின்ஜோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பன்றிக்காய்ச்சல் என்பது ஒரு சாதாரன காய்ச்சல் தான். இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்த உடனே சிகிச்சை பெற்றால் பன்றிக்காய்ச்சலை முழுமையாக குணப்படுத்த முடியும்.
அறிகுறிகள்:-
மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் தொண்டை வலி ஆகிய இரண்டுமே பன்றிக் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் ஆகும். இது போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையை பொதுமக்கள் அணுக வேண்டும்.
ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், ரத்த பரிசோதனை முடிவுகள் வருவதற்குள் காய்ச்சல் தீவிர நிலையை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால், உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்:-
இந்த காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மையுடையது. தும்மலின் போது இந்த கிருமி நம்மை சுற்றியுள்ள இடங்களில் பரவி விடுகிறது. ஏ.சி. அறைகளில் சுமார் 2 மணி நேரத்திற்கு இக்கிருமியின் வீரியம் இருக்கும். அதனால், அடிக்கடி கைகளை சோப்பு கொண்டு கழுவ வேண்டும். அதோடு, தும்மல் அல்லது இருமல் வந்தால் கைக்குட்டைகளை உபயோகிக்க வேண்டும்.
தற்போது, பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட 4 பேர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சல் ஏற்பட்டவுடன் மருந்து கடைகளுக்கு சென்று தாமாக மாத்திரைகளை வாங்கி உண்ணும் பழக்கத்தை பொதுமக்கள் கைவிட வேண்டும். தாமதிக்கும் நேரத்தில் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரை காப்பாற்ற முடியாத நிலையும் ஏற்படும்". இவ்வாறு எட்வின்ஜோ கூறினார்.