தாராபுரம் நகர காவல் நிலையத்தில் ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திரபாபு, நகர் முழுவதும் 250 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, தாராபுரம் காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர காவல் நிலையத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு இன்று வந்தார். அவருக்குப் பூங்கொத்து கொடுத்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி. சேஷாங் சாய், வரவேற்றார். இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு, காவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது தாராபுரம் டி.எஸ்.பி.தனராசு, ஆய்வாளர் மணிகண்டன், குற்றப்பிரிவு ஆய்வாளர் அன்புச்செல்வி, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்லம், போக்குவரத்து ஆய்வாளர் ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தாராபுரம் நகர் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 252 சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டார்.
அதன் பிறகு முதல் தகவல் அறிக்கை, பழைய குற்ற வழக்குகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் காவலர் குடியிருப்பை ஆய்வு செய்து காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்று மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.
அதன் பிறகு டிஎஸ்பி. அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து காவலர்கள் டிஜிபி சைலேந்திர பாபு உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தாராபுரம் காவல் நிலையத்தில் நவீன 250 சிசிடிவி கேமராக்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் நம்பர் பிளேட் ஸ்கேன் செய்து குற்றவாளிகளை எளிதில் பிடிக்க முடியும். 24 மணி நேரமும் காவலர்கள் கேமரா கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இதனால் திருட்டு சம்பவங்கள் ஆள் கடத்தல் குற்ற செயல் உடனடியாக அடையாளம் காண முடியும் தமிழ்நாடு காவல்துறை குற்ற செயல்களை கண்டறிய நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம்.
சென்னையில் உள்ள போலீஸ் கன்ட்ரோல் ரூமில் 100, 111, 112, இது போன்ற அழைப்புகளுக்கு வரும் தகவல்களை உள்ளூர் காவல் நிலையங்களுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேஸ் ஐடி சிஸ்டம் மூலம் இந்த ஆண்டு 5,500- குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்துள்ளோம். பழைய A, A+ குற்றுவாளின் நடவடிக்கையைக் கண்காணிக்க KV track ஏற்ற புதிய செயலியைக் கொண்டு வந்துள்ளோம்.
பொதுமக்களுக்கு தேவையான ஆபத்து காலத்திலோ, பாதுகாப்பில்லாத சூழலிலோ காவல்துறையை எளிதாகவும், விரைவாகவும் அணுகும் விதத்தில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கிறது ‘காவல் உதவி’ என்னும் செயலி. ஏற்கெனவே காவலன் SOS எனும் செயலி பயன்பாட்டில் உள்ள நிலையில், காவல் உதவி செயலியில் பல சிறப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
66 சிறப்பம்சங்களைக் கொண்டுள்ள இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். முக்கியமாக அவசர காலங்களில் உதவி தேவைப்படும் பெண்கள் அதில் இருக்கும் சிவப்பு நிற பொத்தானை அழுத்துவதன் மூலம், உதவி வேண்டுவோரின் விவரம், இருப்பிடம் உள்ளிட்டவை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு விரைவாகக் கிடைக்கும் வகையில், இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆபத்துக் காலத்தில், காவல்துறையை எளிதாக அணுகுவதற்கு இதனைப் பயன்படுத்தப் பொதுமக்கள் டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்யும் இளைஞர்கள் பொது இடங்களில் சாகசம் செய்வது தடுக்கப்பட வேண்டியது. எனவே அவர்களுக்கு என தனியான சாகச பயிற்சி மையங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.
அந்த மையங்களில் சென்று இளைஞர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளலாம் மேலும் பொது மக்களுக்கு இடையூறாக சாகசம் செய்வது குற்றச் செயல்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.