தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டம். சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்கவேண்டும் என்று கோரிக்கை.
திருப்பூர்: திமுக அரசை கண்டித்து தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி காதில் பூ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்குச் சங்கத்தின் கோட்டத் தலைவர் பீட்டர் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தின்போது சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தை பணிக்காலமாக அறிவித்து பணப்பலன்களை வழங்கவேண்டும். சாலைப்பணியாளர்களின் பணிநீக்க காலம் மற்றும் தற்போதைய பணிக்காலத்தில் இறந்த சாலைப்பணியாளர்களின் வாரிசுகள் கருணை அடிப்படையில் விண்ணப்பம் செய்து காத்திருப்போருக்கு விரைந்து பணி வழங்கவேண்டும்.
சாலைப்பராமரிப்பில் காலியாக உள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு சாலைப்பணியாளராகப் பணி வழங்கவேண்டும். நெடுஞ்சாலை பராமரிப்பில் ஒட்டு மொத்த ஒப்பந்த நடைமுறை கைவிடப்படுவதாக அறிவித்திருந்தாலும் புதுப்பிக்கப்படும் நெடுஞ்சாலைகளைத் தனியார் ஐந்து வருடம் பராமரிக்கும் நடைமுறையை ரத்து செய்து சாலை பராமரிப்பு பணிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட சாலைப்பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.