கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மாநிலத் திட்டக்குழுவின் தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆய்வு வாரியம் இணைந்து நடத்திய 2 நாள் சர்வதேச கருத்தரங்கு நேற்றுடன் நிறைவடைந்தது.
கோவை: மாநில திட்டக்குழுவின் தமிழ்நாடு மாநில நில பயன்பாட்டு ஆய்வு வாரியம் மற்றும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து ஊடுருவிய மரத்தாவரங்களின் மேலாண்மை பற்றிய 2 நாள் சர்வதேச கருத்தரங்கை நடத்தியது. கடந்த 2ம் தேதி தொடங்கிய இந்தக் கருத்தரங்கின் 2வது நாள் நிகழ்வானது மரக்கன்றுகள் நடுதலுடன் தொடங்கியது.
மாநில திட்டக்குழு துணைத் தலைவர் டாக்டர். ஜெ. ஜெயரஞ்சன், மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் வன ஆக்கிரமிப்பு இனங்களால் செய்யப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியை பார்வையிட்டார்.
இதனை பயிலரங்கில் பங்கேற்ற பிரதிநிதிகள் அனைவரும் பார்வையிட்டனர். தொழில்நுட்ப அமர்வுகளில், மதிப்பு கூட்டல் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் மற்றும் கொள்கை மற்றும் சட்டச் சிக்கல்கள் போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த குழு விவாதத்திற்கு மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அகமது ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் பங்கேற்ற வனவியல் கல்லூரி டீன் பார்த்திபன், வன ஆக்கிரமிப்பு உயிரினங்களின் மேலாண்மை என்ற தலைப்பிலான பயிலரங்கின் முக்கிய விஷயங்களை சுருக்கமாக எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வெ. கீதாலட்சுமி சிறப்புரையாற்றினார். அதில், சுற்றுச்சூழல் மற்றும் அதனுடன் தொடா்புடைய சமூகவியல் தாக்கங்களைக் கருத்தில் கொண்டு வன ஆக்கிரமிப்பு உயிரினங்களை நிர்வகிப்பதற்கான உத்திகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து எடுத்துரைத்தார்.
மாநில திட்டக் கமிஷன் துணைத் தலைவர் டாக்டர். ஜே. ஜெயரஞ்சன், வன ஆக்கிரமிப்பு உயிரினங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிலரங்கை வெற்றிகரமாக நடத்தியதற்காக அமைப்பாளர்களைப் பாராட்டினார்.
வன ஆக்கிரமிப்பு இனங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக திறம்பட மாற்றியதற்காக தொழில்முனைவோரையும், வனஆக்கிரமிப்பு இனங்கள் குறித்த ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளுக்காக ஆராய்ச்சி அறிஞர்களையும் அவர் அப்போது பாராட்டினார். கருத்தரங்கின் இறுதியாக பேராசிரியர் (வனவியல்) முனைவர் கே. பரணிதரன் நன்றியுரை ஆற்றினார்.