பெட்ரோல், டீசலும் வேண்டாம், மின்சாரமும் வேண்டாம் - காற்றே போதும் காரில் பயணிக்க.!


கார் வாங்குவதற்கு பயப்படாத நம் மக்கள், அன்றாடம் உயரும் பெட்ரோல், டீசல் விலையை பார்த்து பெரிதும் பயப்படுகின்றனர். கார் வாங்கி அதில் எரிபொருள் நிரப்பினாலும், கிடைக்கும் குறைந்த மைலேஜ்-ஆல் காசை கரியாக்க விருப்பமின்றி இருசக்கர வாகனமே நமக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர் நடுத்தர வர்க்கத்தினர்.

இந்த சூழலில், ஒரு காரை காற்றை வைத்தே இயக்க முடியும் என்று கூறியதோடு, அவ்வகையில் காற்றினால் இயங்கும் கார் ஒன்றை தயாரித்து முடித்துள்ளார் கோவையை சேர்ந்த சிவ சுப்ரமணியம்.



அடிப்படையில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான புராஜெக்ட் சென்டர் நடத்திவரும் இவர், புதிய படைப்புகளை படைப்பதிலும், தற்சார்பு வாழ்க்கை முறையை வாழ வேண்டும் என்பதிலும் முனைப்பு காட்டி வருகிறார்.

எரிபொருள் நிரப்பும் இடத்தில் முழுவதுமாக காற்று நிரம்பிய சிலிண்டர் அமைப்பதே ‘ஏர் கார்’ தயாரிப்பின் அடிப்படையான மூலதனம் என்கிறார் சிவ சுப்பிரமணியம்.

தனது படைப்பு குறித்து சிவ சுப்ரமணியம் கூறியதாவது:-

பள்ளி பருவத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு தானியங்கி இயந்திரங்கள் இயங்க தேவைப்படும் நுமேட்டிக் (Pneumatic) இயந்திரத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தேன். அந்த நேரத்தில், இயந்திரங்கள் பற்றிய நுணுக்கங்களையும், தெளிவையும் அறிந்து கொண்டேன். சுமார் பத்து ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றிய பிறகு, பொறியியல் மாணவர்களுக்கு இயந்திரங்கள் வடிவமைத்து கொடுக்கும் மையம் (புராஜெக்ட் சென்டர்) தொடங்க முடிவெடுத்தேன்.

அதன்படி, கடந்த 2011-ம் ஆண்டு மசக்காளிபாளையம் அருகே புராஜெக்ட் சென்டர் தொடங்கினேன். அன்று முதல் கல்லூரி மாணவர்களின் நுணுக்கங்களை அவர்களோடு சேர்ந்து நானும் கற்றுக்கொண்டேன். மாணவர்களோடு இணைந்து தொடர்ந்து பல்வேறு புதிய இயந்திரங்களை உருவாக்கினேன்.




தற்சார்பு:-

சில மாணவர்களிடம் நல்ல திறமைகள் உள்ளது. ஆனால், அவர்களுக்கு தேவையான சரியான களம் இல்லை. அதனால், தங்கள் திறமைகளை மாணவர்களால் வெளிக்கொணர முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையை மாற்ற மாணவர்கள் தற்சார்பு தன்மையான இயந்திரங்களை உருவாக்க வேண்டும் என்று அவர்களை ஊக்குவிப்பேன்.

அதாவது, நம் நாட்டில் கிடைக்கும் வளங்களை பயன்படுத்தி வாழும் வாழ்க்கை முறை. இந்த வாழ்கை முறையில், நாம் வாழ்வதற்கான செலவு பெருமளவு குறைவதோடு அண்டை நாட்டினரிடம் எந்த பொருளுக்கும் கையேந்த வேண்டிய சூழலும் இருக்காது. இயற்கை எரி பொருட்கள் குறைந்து வரும் நேரத்தில் அவற்றை அதிகம் பயன்படுத்தாமல் நம்மிடம் இருக்கும் வளங்களை கொண்டு வாழும் வகையில் இயந்திரங்களை தயாரிக்க வேண்டும் என்ற ஆர்வம் என்னிடம் மிகுத்தது. 




ஏர் கார்:-

என்னிடம் இயந்திரங்கள் தயாரிப்புக்காக வரும் பொறியியல் மாணவர்கள் சிலர் தண்ணீர், மற்றும் காற்றால் இயங்கும் காரை தயாரிக்க முடியுமா? என்று கேட்டனர். அப்போது தான் ஏர் கார் தயாரிக்கும் முயற்சியை தொடங்கினேன். முதற்கட்டமாக இரு சக்கர வாகனம் ஒன்றின் எஞ்ஜினை வங்கினேன். அது செயல்படும் நுணுக்கங்களை ஏற்கனவே அறிந்திருந்ததால், எஞ்சினுக்குள் எரிபொருள் செல்லும் வழியாக காற்றை செலுத்தி சோதித்தேன். அப்போது, எஞ்சின் மெதுவாக வேலை செய்ய ஆரம்பித்தது. 



ஒரு எஞ்சின் இயங்க அழுத்தம் என்பது அடிப்படை தேவையாகும். சாதாரணமாக, நமது இரு சக்கர வாகனத்தில் எரிபொருள் இயந்திரத்திற்குள் செலுத்தப்படும் போது உண்டாகும் அழுத்தமே அந்த இயந்திரத்தை இயக்குகிறது. அந்த வகையில் இரு சக்கர வாகனத்தின் என்ஜினை காற்றின் அழுத்தத்தை கொண்டு இயங்கும்படி வடிவமைத்தேன், அதற்காக இயந்திரத்தில் சிறு சிறு மாறுதல்கள் செய்தேன்.




சிலிண்டர்:-

தொடர்ந்து, மறு வடிவமைக்கப்பட்ட என்ஜினை கார் போன்று தயாரிக்கப்பட்ட அமைப்பின் மீது பொருத்தினேன். அதன் பின்புறம் ‘கம்ப்ரஸர்’ என்று கூறப்படும் காற்றழுத்தம் தரக்கூடிய சிலிண்டரை பொருத்தினேன். அந்த சிலிண்டர் 50 லிட்டர் கொள்ளவு கொண்டதாகும். 

சிலிண்டரில் இருந்து எஞ்சினுக்குள் செலுத்தப்படும் காற்று அதை இயக்க தொடங்கியது. வேலை மிகவும் எளிமையாக முடிந்தது. 

இரு சக்கர வாகனத்தின் எஞ்சின் என்பதால், சிலிண்டரில் இருந்து பெறப்படும் காற்று இயக்கம் முடிந்தவுடன் வெளியேறிவிடுகிறது.

அதனால், சுமார் 100 மீட்டர் வரை தான் இந்த காரில் பயணிக்க முடியும். காற்றில் பயணிப்பதற்காக பிரத்யேக எஞ்சின் தயாரிக்கப்பட்டால் வெளியாகும் காற்றை மீண்டும் சிலிண்டருக்கு உள்ளேயே செலுத்தி சுழற்சி முறையில் காற்றை பயன்படுத்தலாம். இதன் மூலம், இயற்கைச் சூழல் பாதிக்காத வண்ணம் எத்தனை தூரம் வேண்டுமானாலும் பயணிக்க முடியும். 










பொருளாதாரம்:-

இந்த ‘ஏர் கார்’-ஐ தயாரிக்க ரூ.20 ஆயிரம் மட்டுமே செலவானது. இதே முறையை பயன்படுத்தி இருசக்கர வாகனமும் காற்றில் இயங்கும்படி வடிவமைக்க முடியும். பொருளாதார சூழ்நிலைகளால் என்னால் இந்த பணியை தொடர்ந்து செய்ய முடியவில்லை.  வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த கண்டுபிடிப்புக்கு பொருளாதார உதவி செய்யுமானால் மிக குறைந்த விலையில் நாட்டு மக்களுக்கு காற்றில் இயங்கும் இரு சக்கர வாகனம் மற்றும் கார் தயாரிக்க முடியும். 

வரும் காலத்தில் பணம் ஈட்டுவதற்காக மட்டும் ஒரு இயந்திரத்தை தயாரிக்காமல் நம் நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த வகையில் இது போன்று பல இயந்திரங்களை படைக்க வேண்டும்.

இது தொடர்பாக, மாணவர்களின் எந்த வித சந்தேகங்களுக்கும் விளக்கம் தர தயாராக உள்ளேன். மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் மாணவர்கள் என்னை அழைக்கலாம். (கைபேசி: 9566674837). இவ்வாறு அவர் கூறினார்.

இயற்கையை எந்த விதத்திலும் பாதிக்காத, நாட்டின் பண மதிப்பையும் அதிகரிக்கும் இவ்வகையிலான படைப்புகளை உலகரியச்செய்வோம். மத்திய மற்றும் மாநில அரசுகள் இது போன்ற படைப்புகளின் மீது தனிக்கவனம் செலுத்தி ஊக்குவிக்கும் போது இந்தியா தற்சார்பு நாடாகும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...