கூடலூர் கோழிப்பாலம் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில், கட்டுமான பொருட்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியில் கடத்தி செல்லப்பட்ட ரூ.1.12 லட்சம் மதிப்புள்ள போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் டிப்பர் லாரியில் கடத்திச் சென்ற ரூ.1.12 லட்சம் மதிப்பிலான குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.
கூடலூர் பகுதி தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா என 3 மாநிலங்களும் சந்திக்கும் இடமாக உள்ளது. இதன் காரணமாக அவ்வழியாக கடத்தல் சம்பவம் அதிகமாக நடந்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஹான்ஸ் போன்ற குட்கா போதை பொருட்கள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தமிழக, கேரளா, கர்நாடக எல்லை சோதனை சாவடியில் தமிழக போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு போதை பொருட்கள் கடத்தலை தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் பிரபாகர் உத்தரவு படி கூடலூர் போலீசார் கோழிப்பாலம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கேரள மாநிலம் மம்பாடு பகுதியிலிருந்து கட்டுமான பொருட்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த லாரியிலிருந்து ஒரு லட்சத்தி 12 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் மறைத்து வைத்து கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலிசார் லாரியில் இருந்த அஸ்கர்(37) மற்றும் முஜீப் ரஹ்மான் (32) ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.