கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாலமுருகன் என்பவர் வட இந்தியர்களின் அராஜகத்தை ஒடுக்கக் கோரி மகள் எழுதிய கவிதையுடன், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி-யிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
கோவை: கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். கட்டிடத் தொழிலாளியான இவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தான் வட இந்தியர்களால் வேலையின்றி தவிப்பதாகவும், கட்டிடத் தொழிலில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் இதேபோல் வட இந்தியர்களின் ஆதிக்கம் நீடிக்கும் நிலையில் இது தமிழ்நாட்டுக்குப் பேராபத்து எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மனுவில், தனது மகள் எழுதிய கவிதை தொகுப்பையும் இணைத்துள்ளார்.
'பேனா,பென்சிலுக்கும் சண்டையிடும் அரசியல்வாதிகளுக்கும், விஜயா? அஜித்தா? என சண்டையிடும் ரசிகர் பெருமக்களுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள்...அழிந்து வரும் தமிழகத்தையும், எனது தமிழ் மண்ணையும் மீட்டெடுப்போம்.. வட இந்தியர்களிடமிருந்து என்னை போன்றவர்களையும், நமது வருங்காலத்தையும் போற்றி பாதுகாப்போம், போராடுவோம் தமிழகத்தை மீட்கும் வரை' இப்படிக்கு தமிழனின் ஒருவர் தமிழ் மதி என அந்த கவிதை தொகுப்பு முடிகிறது.
எங்கள் பிள்ளைகள், வட இந்தியர்களுக்கு அடிமையாகி விட கூடாது என்று ஆதங்கப்படும் பாலமுருகன், தனது கோரிக்கை மனுவால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.