திருப்பூர் - ஊத்துக்குளி சாலை எஸ்.பெரியபாளையத்தை சேர்ந்த ராஜா என்பவர் பி.பார்ம் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததை அடுத்து அவரை கைது செய்து மாவட்ட நலப்பணிகள் இயக்குநர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே பி.பார்ம் படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் உள்ள எஸ்.பெரியபாளையத்தில் போலி மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருவதாக மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து நேற்று மாலை நலப்பணிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண்பாபு மற்றும் மகேஷ்குமார் தலைமையில் அப்பகுதியில் செயல்பட்ட நல்லாண்டவர் கிளினிக்கில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, அந்த கிளினிக்கை ராஜா (44) என்பவர் நடத்தி வருவதும் மருந்தாளுநர் (B Pharm) படிப்பு மட்டும் படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், மருந்து மாத்திரைகளை நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டபோது ஆல்டர் நேட்டிவ் மெடிசன் முடித்து சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் ஊசி மருந்துகள் கழிவுகளை தொற்று பரவும் வகையிலும், தமிழ்நாடு பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் சட்டப்படி கழிவுகளை அகற்றாமல் கையாண்டதும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அந்த கிளினிக்குக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில், ராஜா மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், அவர் போலி மருத்துவர் என்பது உறுதியானதால் ஊத்துக்குளி காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் கனகராணி புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.