ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, சமூக விரோதிகள் சிலர் போராட்ட களத்திற்குள் புகுந்ததாக கூறிய போலீசார், ஆயிரகணக்கான இளைஞர்கள் மீது தடியடி நடத்தினர்.
சென்னை, கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போலீசார் நடத்திய தடியடியில் பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக, நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்தது. இதன் விளைவாக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. சமீபத்தில் சென்னை மெரீனா கடற்கரையில் ஆய்வு நடத்திய ராஜேஸ்வரன் இன்று காலை கோவை வந்தார்.

கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் போராட்டம் நடத்திய வ.உ.சி. மைதானம், காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும்ம் கொடீசியா மைதானம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக நீதிபதி ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் வன்முறைகள் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சம்பவ இடங்களுக்கு சென்று முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகிறேன். விசாரணையின் தொடக்கமாக கலவரம் நடந்ததாக கூறப்படும் இடங்களில் பொருட்களின் சேத நிலவரம் குறித்து ஆய்வு செய்து வருகிறேன். தொடர்ந்து, 15 நாட்களுக்குள் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்க இருக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பாதிக்கப்பட பொதுமக்கள் எந்த வித பயமும் இன்றி என்னிடம் புகார் அளிக்கலாம். பொதுமக்களிடம் புகார்களை கேட்டறிவதற்கு முன்னதாக செய்தித்தாள்களில் வாயிலாக முறையான அறிவிப்பு வெளியாகும். கோவையை தொடர்ந்து, சேலம் மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தவுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு ) லட்சுமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.