ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், அப்பகுதியில் இருந்த கையேந்தி பவனில் பரோட்டோ அடித்து வாக்கு சேகரித்தது பொதுமக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு அமைச்சர்கள் கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் ஹாஜி முகமது ரஃபி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, திமுக அரசு கொண்டு வந்துள்ள ஏழை, எளிய மக்களுக்கான, மாணவ மாணவிகளுக்கான ஏராளமான நலத்திட்டங்களைஅவர்கள் பட்டியலிட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
இந்த வாக்கு சேகரிப்பின்போது அங்கிருந்த கையேந்திபவன் ஒன்றிற்கு சென்ற அமைச்சர் செஞ்சிமஸ்தான், அங்கு வைக்கப்பட்டிருந்த மாவை தட்டி பரோட்டா போட்டவாறு, உணவகத்தில் சாப்பிட வந்தவர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
பரோட்டா அடித்து காங்கிரஸ் வேட்பாளருக்கு தமிழக அமைச்சர் வாக்குச்சேகரித்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.