ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள கப்பளாங்கரை ஊராட்சிக்கு உட்பட்ட கோப்பனூர்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மதுரைவீரன் கோயில் வரை ரூபாய் 5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட்- கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.
இதில், முன்னாள் துணை சபாநாயகரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் முதன் முறையாக திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் மாபெரும் வெற்றி பெற்றதுபோல, தற்போது இரட்டை இலை சின்னம் எடப்பாடியார் பக்கம் உள்ளது.
நிச்சயமாக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறுவது உறுதி, என்றார்.
எத்தனை அமைச்சர்கள் பிரச்சாரம் செய்தாலும் பொய் வதந்திகளை பரப்பினாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் எடப்பாடியார் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்று தமிழக மக்கள் நினைக்கிறார்கள். இறுதி எஜமானர்கள் மக்கள்தான். நிச்சயம் இரட்டை இலையை வெற்றி பெறச் செய்வார்கள்., என்றார்.