திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் ஏற்பட்ட திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சுற்றுப்பகுதி முழுவதும் புகை மூட்டமாகக் காட்சியளித்தது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மடத்துக்குளம் பகுதியில் உள்ள படையாச்சி புதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் வேஸ்ட் பொருட்கள் குடோன் உள்ளது.
இந்நிலையில், அங்கு எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.
பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உடுமலை தீயணைப்புத்துறை அதிகாரி கோபால் தலைமையிலான குழுவினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், இந்த தீ விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.