தேமுதிக கொடி நாளையொட்டி கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் கொடி ஏற்றிய பிரேமலதா விஜயகாந்த், சுற்றுச்சூழலுக்கு எதிராக கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பது எதற்கு என கேள்வி எழுப்பினார்.
சென்னை: சுற்றுச்சூழலுக்கு எதிராக கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது எதற்கு என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பினார்.
கடந்த 2000 ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் பிப்ரவரி 12ஆம் தேதி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொடி நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது,
அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக தலைமையகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
முன்னதாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் தேமுதிக கொடியை ஏற்றிவைத்த பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஈரோடு இடை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் அமோக வெற்றி பெறும். தமிழக அமைச்சர்கள் ஈரோடு இடைத்தேர்தலில் முகாமிட்டு பண பட்டு வாடா செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை. ஈரோடு மாவட்டத்தில் கேப்டன் விஜயகாந்த், எண்ணற்ற நலத்திட்ட உதவிகளையும், இலவச மருத்துவமனைகளையும் அரசியலுக்கு வருவதற்கு முன்பிலிருந்தே எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
ஆகையால் நிச்சயம் ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக வெற்றி பெறும். ஈரோடு இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற வேண்டும்.
மெரினாவில் பேனா நினைவுச் சின்னம் வைப்பது தொடர்பான கேள்விக்கு, கேப்டன் விஜயகாந்த், கலைஞருக்கு மெரினாவில் தங்க பேனாவை பரிசாக கொடுத்துள்ளார். அந்த அளவுக்கு கலைஞர் மீது கேப்டனுக்கு பெரிய மதிப்பு உண்டு. ஆகையால் சுற்றுச்சூழலுக்கு எதிரான கடலில் பேனா நினைவு சின்னம் எதற்கு என்றும் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் என்பது தமிழ்நாட்டிற்கான தேர்தல் அல்ல, அது இந்தியாவிற்கான தேர்தல் அதில், யாருடன் கூட்டணி என்பது குறித்து அப்போது பேசலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.