வால்பாறை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினர் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற நிலையில் வனத்துறையினர் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.
வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டுயானைகள் கூட்டமாகவும், குட்டியுடன் மற்றும் தனியாகவும் சுற்றித்திரிந்து வருகின்றன.
குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தும் யானைகள், வாழைமரம் பலா மரம் போன்றவற்றையும் சேதப்படுத்தி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை வால்பாறை அருகேயுள்ள புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை, தேயிலைத் தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயேவிரட்டினர். மேலும், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்கும் வகையில், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.