கோவையில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு விஸ்வஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் பெயர்களை சொல்லி திதியும் கொடுக்கப்பட்டது.
கோவை: 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் 58 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
வருடம் தோறும் பிப்ரவரி 14-ஆம் தேதி குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. இந்த துயர நிகழ்வின் 25வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, இந்த ஆண்டும் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, பேரூர் படித்துறையில் விஷ்வஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் சார்பில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு 25ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அப்போது, உயிரிழந்தவர்களின் பெயர்களை சொல்லி திதியும் கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்த அமைப்பை சேர்ந்த கோட்டச் செயலாளர் சிவலிங்கம், கோவை மாநகர் மாவட்ட செயலாளர் ரவிந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.