கோவை கோபாலபுரத்தில் பட்டப்பகலில் இளைஞரை கொலை செய்துவிட்டு தப்பிச்சென்ற கும்பலை கோத்தகிரி அருகே கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தபோது காவலரை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற இருவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
கோவை: கோவை நீதிமன்ற வளாகம் அருகே பட்டப்பகலில் ஒருவரை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட நிலையில், தப்பிச்செல்ல முயன்ற இருவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் நேற்றைய தினம் கீரணத்தம் பகுதியை சேர்ந்த கோகுல் மற்றும் சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் ஆகியோரை மர்ம கும்பல் ஒன்று வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த கோகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த மனோஜ் கை மற்றும் தலையில் வெட்டுக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டப்பகலில் அரங்கேறிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தப்பியோடிய மர்ம கும்பலை சேர்ந்த ஜோஸ்வா தேவபிரியன், கௌதம், அருண்குமார், பரணி, ஹரி உள்பட 7 பேரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் போலீசார் கோத்தகிரி அருகே வாகன சோதனையின் போது மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை போலீசார் கோவைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனிடையே மேட்டுப்பாளையம் அருகே வந்த போது, ஜோஸ்வா மற்றும் கௌதம் ஆகியோர் சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
இதற்காக போலீசார் வாகனத்தை நிறுத்தியுள்ளனர். கீழே இறங்கிய இருவரும், அருகே இருந்த புதர் ஒன்றில் மறைத்து வைத்திருந்த கத்தியால், பாதுகாப்புக்கு சென்ற காவலர் யூசுப்பை வெட்டிவிட்டு தப்பிச்செல்ல முயன்றுள்ளனர். அப்போது, போலீசார் தப்பிச்செல்ல முயன்ற ஜோஸ்வா மற்றும் கௌதம் ஆகிய இருவரையும் காலில் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
காயமடைந்த காவலர் யூசுப், குற்றவாளிகள் ஜோஸ்வா மற்றும் கௌதம் ஆகியோர் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
கொலை வழக்கில் கைதானவர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.